கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

🕔 November 28, 2017

– க. கிஷாந்தன் –

ண்ணன், தங்கை இருவர் காணாமல் போனமை தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் இன்று செவ்வாய்கிழமை காலை முதல்  பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கனேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களுடைய தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவுக்காக கடந்த 23ம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் 26ம் திகதி முதல் இவர்கள்  காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை உறவினர்கள் முறைபாடு செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவருடைய கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனது தொடர்பில், பொலிஸில் முறைபாடு செய்து விட்டு வருவதாக கூறிச் சென்ற இவர்கள் திரும்பி வரவில்லை என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றுக்கு அருகில் ஆள்ளில்லாமல் காணப்படுவதாக பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சிலர் – உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து மஸ்கெலியா பொலிஸார் இன்று காலை ஸ்தலத்துக்கு விரைந்ததோடு, தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மோப்ப நாயையும் ஈடுப்படுத்தியுள்ளனர்.

இதன்போது பொலிஸ் மோப்ப நாய் கவரவில ஆற்று பகுதியை நோக்கி சென்றதையடுத்து இவர்கள் இருவரும் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டது.

அதேவேளை காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படும் மேற்படி யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆற்றுப் பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் காணப்படுவதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இவர்கள் ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் குளிக்க சென்று நீரில் மூழ்கியிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் விசாரித்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க குறித்த ஆற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கென கொழும்பிலிருந்து சுழியோடிகள் மற்றும் கடற்படையினர்களின் உதவிகளையும் மஸ்கெலியா பொலிஸார் நாடியுள்ளனர்.

காணாமல் போன இருவரும் ஒரு தாயின் பிள்ளைகள் எனவும், இவர்களின் தந்தையர்கள் இருவர் எனவும் குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்