புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு
எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இடத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், தனக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இடத்தினைப் புனரமைப்பதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்தே, மாவீரர் துயிலும் இடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ஆகியோர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிதியின் மூலமாக, விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களின் கல்லறைகளை புனரமைப்பதற்கும், அவை அமைந்துள்ள இடத்தைச் சுற்றி பாதுகாப்பு சுவர் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் தான் விரும்புவதாக, அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில், இறுதியாக நடந்த கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.