ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி
– க. கிஷாந்தன் –
ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை உட்கொண்டவர்கள் பலர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் இன்று செவ்வாய்கிழமை டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இற்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் அடங்குகின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கல்வி பயிலும் 42 மாணவர்கள் டயகம வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனையவர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டயகம மேற்கு பிரிவு ஆலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பூஜையின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தினை உண்டவர்களே இவ்வாறு சுகயீனமுற்றனர்.
எவ்வாறாயினும், இவர்களில் இதுவரை 41 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒரு மாணவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது குறித்து பொது மகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்; ஆலயத்திற்கு அருகாமையில் கடந்த பல வருடகாலமாக கிருமிநாசினி கலவை செய்வதற்கு தண்ணீர் எடுக்கும் இடமொன்று உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி உணவு சமைத்ததாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதனால் பலர் நேற்று முதல், வயிற்று வலியாலும் வயிற்றோட்டத்தாலும் அவதியுற்றனர் என்றார்.
இது குறித்து பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்களும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.