முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

🕔 November 17, 2017

 

காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை காலியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வஜிர அபேயவரத்தனவுடனும் தொடர்புகொண்டு அமைச்சர் றிஷாட் நிலைமைகளை விளக்கினார்.

முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் பீதியையும் நீக்கும் வகையில் உரிய நடவடிக்கைக்கு ஆவண செய்யுமாறு வேண்டிக்கொண்ட அமைச்சர் றிஷாட், யுத்த காலத்தில் கூட, காலியில் இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அழகக்கோனுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிஷாட், காலியிலுள்ள விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக் கடமையில் மீண்டும் ஈடுபடுத்துமாறும் வேண்டிக்கொண்டார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்