சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

🕔 November 16, 2017

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளின் லட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மிக நீண்ட காலமாக சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கான தனியானதொரு உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். எங்களுடைய ஆட்சி காலத்திலும் இந்த பிரச்சினை நிலவிய போதும், எங்களிடம் யாருமே இது குறித்து பேசியிருக்கவில்லை. இதன் காரணமாக இவ்விடயத்தில் எங்களை யாரும் குற்றம் சுமத்த முடியாது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை பகிரங்கமாக வழங்கியிருந்தார். ஒரு பிரதமர் நினைத்தால் இரவோடு இரவாக உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கலாம். அது ஒரு பெரிய விடயமேயில்லை. இப்படியான ஒரு விடயத்தை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வதானது பிரதமரின் வாக்குறுதிகளின் லட்சணத்தை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர்களான றிஷாத், ஹக்கீம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்த போதும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவ்விடயத்தை பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். அந்த மக்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வீதியை மறித்து அங்கே தங்கி போராட்டம் செய்திருந்த போதும், தனது வாக்குறுதி பற்றி சிறிதேனும் பிரதமர் அலட்டிக்கொள்ளவில்லை. தனது பகிரங்க வாக்குறுதி தொடர்பில் ஒரு நாட்டின் பிரதமர் இத்தனை பொடு போக்காக இருப்பது ஆரோக்கியமானதல்ல.

இதனூடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாய்ந்தமருது மக்களை சிறிதேனும் கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம். அவரினூடாக தங்களது தேவை நிறைவேறாது என்பதை உணர்ந்த சாய்ந்தமருது மக்கள் ஜனாதிபதியை நோக்கி காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.

இருப்பினும் அவர்கள் பிரதமருக்கு தங்களது சிறிய எதிர்ப்பையேனும் வெளிக்காட்டாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இன்றைய இக்கட்டான சூழ் நிலையில் பிரதமர் தடுக்க நினைத்தால் ஜனாதிபதியால் வழங்க முடியுமா என சாய்ந்தமருது மக்கள் சற்று சிந்தனை செய்து கொள்ளுங்கள்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்