சதொச ஊடாக எதிர்வரும் வாரத்தில் 65 ரூபாய்க்கு தேங்காய் விற்கப்படும்: நிறுவன தலைவர் தெரிவிப்பு

🕔 November 8, 2017

– பரீட் இஸ்பான் –

நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் வரும் வாரத்தில் 12 லட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

வறட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டினால், தேங்காயின் விலை திடீரென அதிகரித்தது. இதனை கருத்திற் கொண்டு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கமைய தேங்காய்களை கொள்வனவு செய்து சதொச ஊடாக குறைந்த விலையில் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சதொச நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

இதற்கமைய கால்நடை வளசபை ஐந்து லட்சம் தேங்காய்களையும், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மூன்று லட்சமும், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் மூன்று லட்சமும், அல்கடுவ பெருந்தோட் சங்கம் ஒரு லட்சமுமாக மொத்தம் 12 லட்சம் தேங்காய்களை வழங்கவுள்ளதாகவும், எதிர்வரும் வாரம் தொடக்கம் சதொச ஊடாக அவற்றினை விநியோகிக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதப் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இன்னும் 5 லட்சம் தேங்காய்களை கொள்வனவு செய்து, மொத்தமாக 17 இலட்சம் தேங்காய்களைநாடு பூராகவுமுள்ள சதொச கிளை மூலம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பில் கூட்றடுவு மொத்த விற்பனை நிலையத் தலைவர் றிஸ்வான், கால்நடை வள சபை பொது முகாமையாளர் உபாலி ஜயவரத்தன, சிலாப பெருந்தோட்ட நிறுவனத் தலைவர் ஆசிரி ஹேரத், எல்கெடுவ பெருந்தோட்ட நிறுவனத் தலைவர் நிலூ விஜேயதாச மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்