புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு
🕔 August 9, 2015
– முன்ஸிப் –
‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’ எனும் தலைப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை விளினியடி சந்தி மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற மேற்படி இளைஞர் மாநாட்டில், கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 2000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் செயலாளரும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி, கிழக்கு மாகாண முதலமைச்சரும், கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், ஐ.தே.கட்சியில் மு.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், ஏ.எல். தவம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்தீன்மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் ஏ.எம். தாஹிர் உள்ளிட்ட பலர் இம் மாநாட்டில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் கட்சியிலிருந்து பிரிந்து சென்று, அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசில் இணைந்து கொண்டமையினையடுத்து, இளைஞர் காங்கிரசின் புதிய தேசிய அமைப்பாளராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அண்மையில் நியமித்திருந்தார். இந்த நிலையிலேயே, இன்றைய இளைஞர் மாநாட்டினை ஆரிப் சம்சுதீன் தலைமையேற்று நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.