கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

🕔 October 26, 2017

 

ட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கட்டார் டோஹாவில் நடைபெற்ற, கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கட்டார் வர்த்தக சம்மேளனம் டோஹாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வர்த்தக சம்மேளனக்கூட்டத்தில் விசேட அதிதிகளில் ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். இந்த வர்த்தக சம்மேளனக்கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், கே.கே. காதர் மஸ்தான் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி, கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹ்மத் பின் ஜாஸ்சிம் பின் மொஹம்மத் அல் – தானி மற்றும் ராஜ தந்திரிகள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அங்கு மேலும் கூறுகையில்;

“இந்த வர்த்தக சம்மேளனம் ஒரு முக்கியமான தருணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போதைய பொருளாதார தொடர்புகளை மேலும் ஆழமாக்கி விரிவுபடுத்த உதவும். அத்துடன் பங்குடமையை ஏற்படுத்தி மற்றவரின் சந்தையிலுள்ள சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்த வழி ஏற்படுத்தும்.

கட்டார் சந்தை இலங்கைக்கு முக்கியமான ஒன்றாகும். இங்கு நாம் இதுவரை ஈடுபடாத பல பிரமாண்டமான துறைகளை எமது வர்த்தக சமூகத்தினர் சாதகமாக பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.

எனவே இந்த சம்மேளனம் எமது வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளில் எதிர்பார்க்கும் இலக்கை இரு நாடுகளும் அடைய ஒரு அடித்தளமாக இருக்கும் என நம்புகிறேன்.

அத்துடன் இலங்கையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கை செய்துள்ளது. மேலும், 1.7 பில்லியன் மக்களை கொண்ட சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்ய தயாராகிக் கொண்டு இருக்கிறது.

இதன்மூலம் தெற்காசிய நாடான இலங்கை – கட்டார் முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாக அமைகிறது.

கட்டாரில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் தமது செயற்திறன்களையும் பயிற்றப்பட்ட தொழில் ஆற்றலையும் காண்பித்து, கட்டாரின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைக்கிறார்கள். இது மேலும், கட்டார் சந்தைக்கு இலங்கை தொழிலாளர்கள் வந்துசேர வழிவகுக்கும்” என்றார்.

இலங்கையின் 7,200 பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதைக் குறிப்பிட்ட ரிஷாட் பதியுதீன், இலங்கையில் எந்த ஒரு முதலீட்டாளரும் அதன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை பயன்படுத்தி ஐரோப்பாவுடனான வர்ததகத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.

2016 ஆம் ஆண்டில் 1,700 கட்டார் மக்கள் மாத்திரமே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்கள். இலங்கை உல்லாசப்பயண சுற்றுலாத் துறையில் நிறைய சந்தர்ப்பங்கள் காத்துக் கிடக்கின்றன.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் கிழமையில் 28 விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹ்மத் பேசுகையில்;

இந்த சம்மேளனம் இலங்கை – கட்டார் வர்த்தக சமூகத்தை இணைக்கும் ஒரு பாலமாக விளங்குவதாகவும் இலங்கை கம்பனிகள் கட்டாரில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க முடியும் எனவும் கூறினார்.

அதேபோல் மறுபுறத்தில் இந்த சம்மேளனம் கட்டார் முதலீட்டாளர்கள் இலங்கையில் கட்டாருக்கான தந்திரோபாய மற்றும் முக்கியமான நிதி மற்றும் வர்த்தக துறையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்