ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

🕔 October 24, 2017

 

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் வதியும் மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணப் பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்துள்ளமையினை உடனடியாக இரத்துச் செய்து, சம்பந்தப்பட்டவர்களின் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு அமைச்சர் றிசாட் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளமையினை அமைச்சர் இந்தக் கடிதத்தில் சுட்டிகாட்டியுள்ளதோடு,  ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்துக்கு பயணம் செய்வதிலேயே அவர்களின் காலம் கழியும் எனவும், இதனால் பல்வேறு போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமக்குப் பரிச்சயமான சூழலில் கல்வி கற்பிப்பது, அவர்களுக்கு வசதியானது எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதன் மூலம் மாணவர்களுக்கும் உச்ச பலன் கிடைக்கும் என்று கல்வியமைச்சர் அமைச்சர் அகிலவிராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, இதனைக் கருத்திற்கு எடுத்து, ஆசிரியர்களுக்கு சொந்தமான மாகாணங்களில் அவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இவ் விடயம் தொடர்பில்  ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் தான் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்