போலி லொத்தர் சீட்டுக்கள் ஆயிரக்கணக்கில் சிக்கின; வைத்திருந்த இளைஞரும் கைது

🕔 October 17, 2017

– க. கிஷாந்தன் –

போலியான லொத்தர் சீட்டுகளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றிற்கமைய, நேற்று திங்கட்கிழமை இரவு, குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது குறித்த இளைஞரிடமிருந்து 3629 லொத்தர் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

10.12.2017 திகதிக்கு அமைய அச்சிடப்பட்டிருந்த குறித்த லொத்தர் சீட்டுகள் ‘அபிவிருத்தி லொத்தர் சபையின்’ சீட்டுகளை போன்று போலியாக அச்சிடப்பட்டிருந்ததோடு, ஒரே தொடரிலக்கத்தில் நூற்றுக்கணக்கான லொத்தர் சீட்டுகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த போலி லொத்தர் சீட்டுகளில் 20 ரூபாய் 100ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பரிசு தொகைகளையுடைய சில சீட்டுகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போலி லொத்தர் சீட்டு தொடர்பிலான விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க விஜேசிங்ஹ தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்