றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா

🕔 August 2, 2015

Athaulla - 01
– எம்.வை. அமீர் –

மைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம். ஜப்பார்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மேலும் தெரிவிக்கையில்;

மர்ஹும் அஷ்ரப் கண்ட கனவுகளை, தேசிய காங்கிரஸ்தான் நிறைவேற்றி வருகிறது. தேசிய காங்கிரஸ் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது. எமது கட்சியின் வியூகங்கள் ஊடாக, வாக்குப்பலம் குறைந்த பிரதேசங்களில்ருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளோம். இம்முறை தேசிய காங்கிரஸ் வகுத்துள்ள வியூகத்தின் அடிப்படையில், சாய்ந்தமருதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும், அதனை இம்மக்கள் கருத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது.

சாய்ந்தமருது வைத்தியசாலை சுனாமியால் முற்றாக சேதமுற்றதன் காரணாமாக, அம்மக்களுக்காக  வைத்தியசாலையொன்றினை அமைக்கவேண்டிய அவசர தேவை இருந்தது. அதனை, குறித்த இடத்தில் அமைப்பதில் சிலருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. இந்நிலையில் சாய்ந்தமருது மக்களுக்காக, வைத்தியசாலையை அவர்கள் விரும்பிய இடத்தில் அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை நாங்கள் செய்தோம். அதனூடாக கம்பீரத்துடன் அங்கு வைத்தியசாலை காட்சியளிக்கின்றது.

பிரதேச செயலகத்தை அமைத்தோம். வீதிகளை புனரமைத்தோம். நீர் விநியோக சபையின் பொறியலாளர் பிரிவை அமைத்தோம். பாலங்கள் அமைத்தோம். சாய்ந்தமருது மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உள்ளுராட்சி சபையை நிறுவுவதற்காக, கல்முனை மாநகரத்துக்குட்பட்ட பிரதேசங்களுக்கோ, சமூகங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தினை நான்கு வலயங்களாகப் பிரித்து, கல்முனைக்கு மாநகர சபையையும், சாய்ந்தமருது உள்ளிட்ட ஏனைய மூன்று பிரதேசங்களுக்கு நகர சபைகளையும் வழங்க இருந்தோம். அந்த நிலையில் அம்முயற்ச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தடுக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்த எங்களிடம் பேசாத சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம், எதையுமே செய்து காட்டாத, நாங்கள்தான் தலைவர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்களின் பின்னால் அலைவது கவலையான விடயமாகும்.  சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை தேசிய காங்கிரஸ்தான் பெற்றுக்கொடுக்கும்.

முன்னாள் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் எங்களுடன்  இருந்திருந்தால், அமையப்போகும் நாடாளுமன்றத்துக்கு தேசிய காங்கிரசின் சார்பில் அவர் சென்றிருப்பார். ஆனால், அவர் அவசரப்பட்டு விட்டார். அந்தப் பாக்கியத்தை, அவருக்கு இறைவன் வழங்கவில்லை.

சாய்ந்தமருது மக்களுக்கு எதையுமே செய்யாமல், நாங்கள் இங்கு பேச வரவில்லை. மனச்சாட்சியுள்ள மக்கள் – தேசிய காங்கிரசையே ஆதரிப்பார்கள்.

அம்பாறை மாவட்டத்தை ஐ.ம.சு.முன்னணிதான் கைப்பற்றும். கடந்தகால தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொள்ளுங்கள். கண்டித் தலைமைத்துவமோ அல்லது வன்னித் தலைமைத்துவமோ எங்களுக்குச் சவால் இல்லை. வன்னித் தலைமைத்துவத்தின் வருகையால், எங்களின் வாக்கு வங்கியில் எவ்வித சரிவும் ஏற்படவில்லை. வன்னித் தலைமையின் வருகையினால், அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பிறந்து, இம்மக்களுடன் இரண்டறக்கலந்து, இவர்களது சுழிவுகள் நெளிவுகளை அறிந்த தேசிய காங்கிரசின் தலைமை உள்ளிட்ட குழுவினரை ஆதரிப்பதன் ஊடாக மட்டுமே, இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும். இப்பிராந்திய எதிர்கால சிறார்களின் நன்மைகருதி ஒன்றுபடுங்கள். பணத்துக்கோ அல்லது ஆசை வார்த்தைகளுக்கோ அடிபணியாது, நம்மை நாமே ஆளவேண்டும் என்ற அடிப்படையில், இப்பிராந்திய மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் தேசிய காங்கிரசின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுங்கள் என்றார்.Athaulla - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்