மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

🕔 September 20, 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கம் காரணமாக 140க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை இரவுக்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன.

பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பினா நியேடோ தெரிவித்துள்ளார்.

மேலும், “புதியதொரு தேசிய அவசர நிலையினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கட்டட இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்பு பணியாளர்கள் தேடி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பாதி அளவு இடிந்த ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சிக்கியிருக்ககூடும் என்று செய்திகள் வந்துள்ள நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோரிலோஸ் மற்றும் புபலா மாநிலங்களில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ள இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் தெற்கு பகுதியில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 90 பேர் உயிரிழந்தனர்.

1985-ஆம் ஆண்டுக்கு பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுளது. மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். தொலைபேசிகளும் இயங்கவில்லை.

 

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். “மெக்சிகோ சிற்றி மக்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். உங்களுக்காக நாங்கள் அங்கிருப்போம்” என, அமெரிக்க ஜனாதிபதியின் ஆறுதல் அமைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்