அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்ய வேண்டுமாயின், அதற்காக, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்வதற்கான ஒரே நோக்கம், அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2019ஆம் ஆண்டு வரை ஒத்திப் போடுவதேயாகும் என்றும் அவர் கூறினார்.
“மேற்படி உத்தேச அரசியல் யாப்புத் திருத்தத்தின் படி, அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களும் ஒரே நாளில்தான் நடத்தப்படும். அதற்கான திகதியை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். மேற்படி உத்தேச திருத்தம் அமுலுக்கு வருமாயின், அதன் பிறகு ஒவ்வொரு மாகாண சபைக்கும், தனித்தனியாக தேர்தல்களை நடத்த முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசியல் யாப்பின் படி, மாகாண சபையொன்று கலைந்தால், அதற்கான தேர்தலுக்கு அழைப்பு விடும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.