புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

🕔 August 3, 2017
– ஆர். ஹசன் –

காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதுதான் சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா ஆகிய இரண்டு பள்ளிவாயல்களிலும், 1990.08.03ஆம் திகதி இரவு இஷா தொழுகையின் போது சுஜுதில் இருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 103 முஸ்லிம்கள் ஸ்தலத்தில் ஷஹீதாக்கப்பட்டதுடன், 37 பேர் காயமடைந்தனர்.

இத்துயர சம்பவம் இடம்பெற்று 27 வருடங்கள் பூர்த்தியையொட்டி சுஹதாக்கள் தினம் இன்ற வியாழக்கிழமை நினைவுகூறப்படுகிறது. இது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது;

“விடுதலைப் புலிகளின் அகோர துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக்காகி 1990ஆம் ஆண்டு ஷஹீதாக்கப்பட்ட சுஹதாக்களை நாங்கள் இன்று நினைவுகூறுகின்றோம். தங்களுடைய உயிர்களை அவர்கள் தியாகம் செய்ததன் ஊடாக, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்தார்கள்.

அன்று அவர்கள் இரத்தம் சிந்தியதன் ஊடாக, முழு கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய சூழலும் நிர்ப்பந்ததும் அரசுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக மக்கள் பாதுகாக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கிழக்கு மாகாணத்தில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

சுஹதாக்களை நினைவு கூறும் இந்நாளில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதோடு, அவர்களுடைய குடும்பத்தினருக்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை செய்யவும் வேண்டும். குறிப்பாக, காத்தான்குடி முதலாம் குறிச்சி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலும் அதனுடன் இணைந்து சுஹதாக்கள் நிறுவனம் மற்றும் ஏனைய அமைப்புக்களும் இவ்வாறான பணிகளை ஆற்றி வருகின்றமை பாராட்டத்தக்கது.

இத்தினத்தில் சுஹதாக்களை நினைவு கூறுவது மாத்திரமல்லாது இவ்வாறான தினங்களில் முஸ்லிம்களது பிரச்சினைகள், சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறி வாழுகின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளை அடையாளம் காணுகின்றமை, அவற்றைப் பற்றி கலந்துரையாடுகின்ற ஒரு நாளாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுடைய பாதுகாப்பு, இருப்பிடம், எதிர்காலம் மற்றும் அரசியல் உரிமைகள் போன்ற விடயங்களில் எங்களை நாங்கள் உள்வாங்கி அது தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து இத்தினத்தில் அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இது நாங்கள் அவர்களுக்கு செய்கின்ற கைமாறாகவும் அமையும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்