மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன

🕔 August 2, 2017

ந்த அரசாங்கம், மதஸ்தலங்கள் முதல் மாணிக்க கல் ஏற்றுமதியாளர்கள் என, வரி விதிப்பதில் எவரையும் விட்டுவைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பேருவளையில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது, இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடந்தும் கூறுகையில்;

தற்போதைய அரசாங்கமானது மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களை அடுக்கடுக்காக வழங்கி வருகிறது. அந்த வகையில், இவ்வரசானது மதஸ்தலங்களிலும் தனது கையை வைத்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வரி திருத்த சட்ட மூலத்தில், மத ஸ்தானங்களிலும் அரசு கைவைத்துள்ளது.

புதிய வரி சட்ட மூலத்துக்கு அமைவாக மதஸ்தலங்களுக்கு 3 வீத வரியும், மதஸ்தலங்களினால் இயக்கப்படும் நிறுவனங்களுக்கு 14 வீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மதஸ்தலங்கள் மக்களினால் வழங்கப்படுகின்ற அன்பளிப்புக்களை வைத்தே இயக்கப்படும். மதஸ்தலங்களின் நிதி தொடர்பான தேவைகளுக்கு அரசாங்கம் உதவி செய்வதே பொருத்தமானது.

உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாமலாவது இருக்கலாம். மதஸ்தலங்கள், தனது செயற்பாடுகளுக்கு ஏதாவதொரு நிறுவனத்தை இயக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் வரிவிதிப்பதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இது தவிர புதிய வரி சட்டமூலத்தில் வெளிநாடுகளுக்கு வர்த்தக நோக்கில் இங்கிருந்து, கொண்டு செல்லும் மாணிக்கக் கற்களுக்கான வரியை 0.5 வீதத்தில் இலிருந்து 14 வீதமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு மாணிக்க கற்களை ஏற்றுமதிசெய்யும் வர்த்தகர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

மாணிக்கக் கற்களுக்கு வரியை அதிகரித்ததனூடாக உள்ளூர் மாணிக்கக் கல் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய முடியாத சூழ் நிலை ஏற்படும். இவ் வரி விதிப்பானது பாரிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும்.

இலங்கை நாட்டில் மாணிக்கக் கல் வியாபாரத்தில் முஸ்லிம்களே சிறந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்களை முடக்குவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாம் என்றசந்தேகமும் எமக்கு எழுகிறது. மாணிக்கக் கல் வியாபாரிக்களுக்கு, முன்னாள் ஜனாதிபதின் காலமே பொற்காலம் எனலாம். அவர்களின் வியாபாரங்களுக்கான அனுமதிகள் திறந்து விடப்பட்டிருந்தன.

இந்த அரசாங்கம், போகும் போக்கை பார்க்கின்ற போது, எதிர்காலத்தில் பிச்சைகாரர்களுக்கும் வரிகளை அமுல்செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையில் எத்தனையோ ஆட்சிகள் இடம்பெற்றுள்ளன.இப்படியானதொரு ஆட்சி எங்கும் இடம்பெற்றதாக தெரியவில்லை. இவ் அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் அதிகரித்திருப்பதால், அவர்கள் திருடும் பணத்தை சமாளிப்பதற்காக இவ்வரசாங்கம் மக்கள் மீது வரியை சுமக்கவைக்கிறார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்