நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது

🕔 July 21, 2017

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மத்தியில் மிக அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திமையானது, மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு அதிகரித்திருந்த சிங்கள மக்களிடையேயான செல்வாக்கை செல்வாக்கினை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, அவருடைய இல்லத்துக்கு வந்திருந்த கிண்ணியா பிரதேசமுஸ்லிம் குழுவொன்று, அவரின் புதல்வர்நாமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய போதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘தற்போது எமக்கு சிங்கள மக்கள் செல்வாக்கு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. சிங்கள மக்களின் ஆதரவு மாத்திரமல்லாது முஸ்லிம்களின் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கள மக்கள் எமது பக்கம் திரும்பினால் எங்கள்வெற்றிகளை ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது. எமது கடந்த மே தின கூட்டத்து மக்கள் வெள்ளதைக் கண்டு, இந்த ஆட்சியாளர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். இதனை, எவ்வாறு எதிர்கொள்ளவதென சிந்தித்த இந்த ஆட்சியாளர்கள், ஞானசார தேரரை களமிறக்கினார்கள்.

நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குளினாலேயே தோற்கடிக்கப்பட்டிருந்தோம். எதிர்கால தேர்தல் வெற்றி வியூகங்களானது, சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்பது இந்த ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். முஸ்லிம்களுக்கு எதிரான குழப்பங்களை ஞாசர தேரர் செய்யும்போது, நாம் அதற்கு எதிராக கதைத்து முஸ்லிம் மக்களை எம் பக்கம் கவர்வதற்கு முனைவோம். அப்போது, அதனை பூதாகரமாக்கி, எம்மிடமிருந்து சிங்கள மக்களைப் பிரிப்பதுதான், இந்த ஆட்சியாளர்களின் சதியாக இருந்தது.

இருந்த போதிலும் நாம் இவ்விடயங்களில் எப்படி முஸ்லிம்கள் பக்கம் நின்று செயற்படமுடியுமோ, அவ்வாறு செயற்பட்டோம். இவர்கள் நினைக்குமளவுக்கு சிங்கள மக்கள் முட்டாள்களல்லர். அவர்களும் ஆட்சியாளர்களின் உள்நோக்கங்களை புரிந்து கொண்டு செயற்பட்டார்கள்.

இதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எம்முடன்தானே இருக்கின்றார்கள், இவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நினைப்பில்தான், இத்தனையையும் ஆட்சியாளர்கள் செய்தார்கள். இறுதியில் இவர்கள் மீது முஸ்லிம் மக்கள் பாயத் தொடங்கினர். இதனை இவ்வாட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

இவர்கள் எதிர்பார்த்தது போன்று சிங்கள மக்கள் இவர்களின் திட்டங்களுக்குள் அகப்படவில்லை. அதே நேரம், தேர்தல் வெற்றியில் பிரதான பங்கு வகித்த முஸ்லிம்களின் வாக்குகளும் இவர்களை விட்டும் சென்றன. தற்போது இவர்களின் நிலை, ‘அரசனுமில்லை புரிசனுமில்லை’ என்பதாகப் போய்விட்டது.

இவர்கள் எங்களது ஆட்சியை கவிழ்ப்பதற்குக் கையாண்ட குறுக்கு வழிகள் எவையும், இன்று அவர்களுக்கு பலிக்கவில்லை. அந்த குறுக்கு வழிகளில் ஒன்றுதான் ஞானசார தேரரின் இரண்டாவது ‘மிஷன்’ ஆகும்.

ஆட்சியாளர்களின் இந்த ‘மிஷன்’ தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. குறுக்கு வழிகள் மிக நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு, இதுவும் ஒரு சான்றாகும்’ என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்