அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

🕔 July 7, 2017
வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடியுள்ளேன். இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளிலிருந்து ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.அந்த வகையில் நாடு, மற்றும் சம்பா அரிசி வகைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளோம்” என்று அமைச்சர் விபரித்தார்.

மேலும், நிபுணர்கள் அடங்கிய குழு, அந்த நாடுகளுக்கு சென்று மாதிரிகளை பரீட்சித்து திருப்தி கண்ட பின்னர், இறக்குமதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைத் தவிர இந்தியாவிலிருந்து மேலும் 01லட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த நாடுகளின் தனியார் துறையினரின் உதவியையும் அவர்கள் விரும்பும் பட்சத்தில்  பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சொன்னார்.

உள்நாட்டுச் சந்தையில் அரிசியை தாராளமாக்கி நுகா்வோர் மற்றும் வியாபாரிகளுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே, இந்தத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய, தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், தனது அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இது தொடர்பான செயற்பாடுகளை துரிதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் 22ம் திகதி கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் சூளாமணி சாட்ஸ்சுமன், இந்தோனேசிய தூதுவர் குஸ்ட்டி னக்ரா அரடியெஸா மற்றம் பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் அஹமட்கான் சிப்றா ஆகியோருடன், அரிசி இறக்குமதி தொடர்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்றை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்