முத்து, வைரம் பதிக்கப்பட்ட இரண்டு கிலோகிராம் தங்க நகைகளுடன், நபர் கைது
இரண்டு கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற ஒருவர் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக, விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் பரக்கிரம பஸ்நாயக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய வர்த்தகர் என்றும், இவர் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.
குறித்த தங்க நகைகளில் முத்துக்களும் வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர், தனது பயணப் பொதியினுள் நகைகளை மறைத்து வைத்துக் கடத்த முற்பட்ட போதே, கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே நபர் முன்னரும் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.