மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

🕔 June 23, 2017

 

ள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சில், இலங்கைக்கான தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும்  இந்தோனேசியா நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த போதே, அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

தாய்லாந்து தூதுவர் சூழாமணி சாட்ஷ்சுவன், இந்தோனேசிய தூதுவர் குஷ்டி குரா அர்டியாசே மற்றும் பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சர்பிராஸ் அகமட்கான் சிப்றா ஆகிபோருடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தன லொக்குஹெட்டி, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அத்தபத்து, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் ஹாமின் ரிஸ்வான் மற்றும் சதொச நிறுவன தலைவர் தென்னகோன் ஆகியோரும் பங்கேற்றனர்.

“உள்ளுர் அரிசி விநியோகத்தை திடமான நிலையில் வைத்திருக்கும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலக்கை அடிப்படையாக கொண்டே, அவரின் வழிகாட்டலின் பெயரில்  உங்களுக்கு நான் இந்த அழைப்பை விடுக்கின்றேன். அரிசி இறக்குமதி தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும்  உங்கள் நாடுகளின்  அரசாங்கத்துக்குமிடையே திறந்த மட்ட உடனடி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, விரைவானஅரிசி கொள்வனவை மேற்கொண்டு உள்நாட்டில் அரிசிச் சந்தையை திடமாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு,  ஜனாதிபதி எனக்கு இந்தவார அமைச்சரவைக் கூட்டத்தின் போது அறிவுறுத்தினார். அதற்கு இணங்கவே நான் உங்களை உடனடியாக இங்கு வரவழைத்துள்ளேன்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தூதுவர்களிடம் தெரிவித்தார்.

“உங்களின் நாடுகளுக்கும் எமக்குமிடையில் வளர்ந்து வரும் நட்பு ரீதியிலான உறவில் திருப்தியும் மகிழ்ச்சியும்  இருப்பதாக நாம் உணருகிறோம். இந்த உறவு பல்லாண்டு காலம் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலே எமது நாட்டின் கோரிக்கை வித்தியாசமாக அமைகின்றது. அரசுக்கும் அரசுக்குமிடையிலான நேரடி பொறிமுறையுடன் இணைந்தவாறு எங்கள் நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு நாட்டம் காட்டுகின்றது. எனவே, தேவைப்பட்டால் தனியார் பிரிவுகளையும் திறந்து விடுவதன் மூலம், எங்களுக்கு மேலும் நீங்கள் உதவி செய்யலாம். எனது அமைச்சின் கீழிருக்கும் கூட்டுறவு முகவர் நிலையம், இந்த இறக்குமதி செயற்பாட்டின்  முக்கிய வகிபாகத்தை மேற்கொள்கின்றது. அத்துடன்  இந்த செயற்பாட்டுடன் அந்த நிறுவனம்  இடையறா தொடர்பில் இருக்கும்.

உங்கள் நாட்டின் இறக்குமதிக்கான அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் வெளிப்படைத்தன்மையான சர்வதேச கொள்வனவு செயல் முறையை அடிப்படையாகக் கொண்டு, எனது அமைச்சின் அதிகாரிகள், உணவு தொழில் நுட்பவியலாளர்கள்,  அரிசி தொடர்பில் தேர்ச்சி பெற்றவர்கள்  உள்ளடங்கிய நிபுணர் குழு ஒன்று உங்களது நாட்டுக்கு வருகை தந்து பரிசோதனை மற்றும் களஞ்சியச்சாலையில் உள்ள அரிசியின் தர நிர்ணயம் தொடர்பான  சான்றிதழை உறுதிப்படுத்துவர். அதன் பின்னர் உங்களிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்வோம். இந்த வேளையிலே நாட்டரிசி, மற்றும் சம்பா வகைகளையே நாம் இறக்குமதி செய்ய எண்ணுகின்றோம். 300 மெட்றிக் தொன் அரிசியையே நாங்கள் ஆரம்பத்தில் கொள்வனவு செய்ய முடியு செய்துள்ளோம். அதுமட்டுமன்றி, இரு தரப்பு வர்த்தகத்தை பல்வேறு வழிகளில் மேம்படுத்துவதற்கும்  நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்” எனவும் அமைச்சர் கூறினார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தூதுவர்கள் அரிசியை உள்ளுர் சந்தையில் திடமாக வைத்திருப்பதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், அமைச்சரின் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து ஆக்கபூர்வமான   பங்களிப்பு நல்குவதாக உறுதியளித்தனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்