காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி
🕔 July 16, 2015
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (52 வயது) இன்று வியாழக்கிழமை காலை, சேருநுவர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானதாக சேருநுவர பொலிஸார் தெதரிவித்தனர். இதன்போது, வாகன சாரதியும் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் மற்றும் சாரதி எம். கலீல் (48 வயது) ஆகியோரே, விபத்தில் மரணமடைந்துள்ளனர். மற்றொருவர் இதன்போது காயமடைந்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து – கிண்ணியாவுக்கு, இன்று வியாழக்கிழமை காலை, வேன் ஒன்றில் சாரதி உட்பட மூவர் பயணித்துக் கொண்டிருந்த போது, சேருநுவர எனும் பிரசேத்தில் வைத்து – இவர்கள் பயணித்த வேன், வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாமடைந்தவர்களை, அருகிலிருந்த சேருநுவர வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வாகன சாரதி எம். கலீல் (வயது 48) என்பவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில், அங்கு வைத்து – காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (வயது 52) மரணமடைந்தார்.
படுகாயமடைந்த முஹம்மது புகாரி (வயது 53) தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்துச் சம்பவம் பற்றி நேருநுவர பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தூக்க மயக்கத்திலேயே இந்த வாகன விபத்து சம்பவித்ததாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்.