மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம்
– முன்ஸிப் அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களைப் பெற்று, அவற்றினை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், எம்.எச்.எம். சல்மான் டொயோட்டா லான்ட் குருசர் (Toyota Land Cruiser) வாகனத்தை தீர்வையின்றி இறக்குமதி செய்து, அதனை பி.ஜி. சுசந்த ரோஹண என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதேவேளை, மு.கா.வின் மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – தீர்வையின்றிப் பெற்றுக் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் (Mercedes Bens) வாகனத்தினை, ப்ரைம் லான்ட்ஸ் பிரைவட் லிமிடட் எனும் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீர்வையின்றி தமக்குக் கிடைத்த வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
மேற்படி தகவல்கள், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமையின் காரணமாக, அரசாங்கத்துக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரும் தமக்கு கிடைத்த வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.