இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்கள் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அமைச்சர் ஒருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்கலாக 06 பேரின் உறுப்புரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் 04 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் கீழ் தனக்கு வழங்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பினை, எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.