அனைவருக்கும் மலசல கூடம்; சர்வதேசத்தின் கால இலக்கை, இலங்கை முந்திவிடும்: அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை

🕔 May 5, 2017
– பர்ஸான் –

லக வங்கி மூலம் பல பாரிய வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும், அவற்றை இன்னும் பல மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவையிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உலக வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக, அதன் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், நேற்று  வியாழக்கிழமை அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவகத்தில் நடைபெற்றது.
உலக வங்கி பிரதிநிதிகள் மத்தியில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;

“ஏழு மாவட்டங்களை மையப்படுத்தி சமூக அடிப்படையில் செயற்படுகின்ற குடிநீர்த் திட்டங்களுக்கான மேலதிக முதலீடுகள், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகின்ற முயற்சி மற்றும் நகரமயப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களின் குடிநீர் தேவைப்பாடு போன்ற பல விடயங்களில் உலக வங்கி திட்டத்தின் தலையீடு சிறப்பான நிலையில்காணப்படுகிறது.
மலசலகூட வசதிகள் இல்லாத மாவட்டங்களில் அவற்றை உலக வங்கி மூலம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2030ஆம் ஆண்டு சகலருக்கும் மலசலகூடங்களை பெற்றுக்கொடுக்கும் சர்வதேச நியமம் இருந்தாலும் அதற்கு பத்து வருடங்களுக்கு முன்னரே நாங்கள் அந்த எல்லையை தாண்டிவிடலாம் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

உலக வங்கியின் சிறப்பான செயற்திட்டங்களால் இவற்றை எம்மால் சாதித்துக் கொள்ள முடியுமென நம்புகிறேன் ” என்றார்.

இக்கலந்துரையாடலில் உலக வங்கி சார்பில் பிராந்திய நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு சிரேஷ்ட நிபுணர் லயின் மேன்சிசஸ், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு நிபுணர் மத்தியூஸ் முல்லாகல், அமைச்சின் செயலாளர் சரத் சந்தசிறி விதான, மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல் மற்றும் கருத்திட்ட பணிப்பாளர் ரணதுங்க ஆகியோர் பற்குபற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்