சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம்

🕔 February 12, 2017

basheer-097ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் – கட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ‘ஹுக்கூம்’ ஹக்கீம், அழிவை நோக்கி நகர்வதாகவும், பசீர் குறிப்பிட்டுள்ளார்.

மு.காங்கிரசின் நேற்றைய கட்டாய உயர்பீடக் கூட்டம் மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேராளர் மாநாடு ஆகியவை தொடர்பில், பேஸ்புக் பக்கத்தில் பசீர் சேகுதாவூத் இட்டிருக்கும் பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு இன்று 30 ஆவது வருடம் தொடங்குகிறது.

11.02.1987 இல் கட்சி பதிவு செய்யப்பட்டது. இந்த முப்பதாவது வருடத்தில் மூத்த போராளிகளுக்கெல்லாம் முந்திய போராளி சகோதரர் ஹஸன் அலி இல்லாமல் பேராளர் மாநாடு நடைபெறுகிறது.

ஏற்கனவே ஏமாற்றங்கள் கனத்தும், வஞ்சனைத் தீ கனன்றும், இதயம் கழன்றும் கிடந்த நமது கட்சி, முப்பதாவது வருடத்தில் முகத்தையும் தொலைத்து நிற்கிறது.

முப்பது வருடத்தைத் தொட்ட நேற்றைய தினம் இடம் பெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, 2015 ஆம் ஆண்டு சட்டபூர்வமற்ற வகையில் திருத்தப்பட்ட யாப்பிலுள்ள அதிகாரத்துக்கு மேலதிகமாக, மேலும் பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் கட்சியாக ஆக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அண்மைய வரலாற்றில், அதிகாரத்தைத் தன்னகத்தே மட்டும் தக்கவைத்து அதன்மூலம் கோலோச்ச முயன்ற சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் இருவரைக் கண்டோம். இவர்கள் தமது தனிப்பட்ட தீர்மானங்களினால் எப்படி அழிந்தனர் என்பதையும் தெளிவாக நாமறிந்தோம். அழிந்த சிங்களவர் மஹிந்த ராஜபக்ஷ என்பதும், தமிழர் பிரபாகரன் என்பதும் ரகசியமல்ல.

இது போல, தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் ஒரு முஸ்லிம் தலைவர் அழிவை நோக்கி நகர்கிறார். அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப்: “ஹுக்கூம்” ஹக்கீம் ஆவார்.

சிலரின் தலைவிதி எழுதப்பட்டுவிட்டது. இன்னும் சிலரின் தலை விதி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிழக்கு வெழுக்கும். சூரியன், விளக்குகளுக்கெல்லாம் பெருவிளக்காய் நின்று பாமரர்க்கும் விளக்கும்.

கண் மூடிகளுக்குள்ளும் சுடர் சுரந்து ஊடுருவும். இன்ஷா அல்லாஹ்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்