ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

🕔 November 12, 2016

– அஷ்ரப் ஏ சமத் –

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 05 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன்  இதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும், அடுத்த 02 வருடத்துக்குள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை பல்கழைக்கழகங்களில் கற்ற பெண்கள் அமைப்பின் 75வது ஆண்டுப் பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை பொரளையிலுள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவி  சீலா ஈபெட் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு, ‘இலங்கை பொருளாதாரத்தில் அடையவுள்ள சா்ந்தப்பங்களும், அவற்றுக்காக எதிா்நோக்கும் சவால்களும்’ எனும் தலைப்பில் உரையாற்றும் போதே, மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி, மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவா் அங்கு தொடா்ந்து கூறுகையில்;

“கொழும்பிலுள்ள சகல நிர்வாக வலயங்களிலும் புகையிரத வசதிகளை ஏற்படுத்துவதற்கு, ஜப்பான் முன்வந்துள்ளது.  அத்துடன்  பாதை அபிவிருத்திளும் முன்னெடுக்கப்படும்.  கொழும்பில்  காலிமுகத்திடலில் உள்ள 269 ஹெக்டயா்  கடல் சாா்ந்த துறைமுகமான  ‘போட் சிட்டி’யானது,  துபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடன் இணைந்து சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

ஹம்பாந்தோட்டையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட துறைமுகமும், விமான நிலையமும், 99 வருடங்களுக்கு சீன அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலா் வருமானமாக கிடைக்கப்பெறுகின்றது. மேலும், ஹம்பாந்தோட்டையில் 50 ஆயிரம் ஏக்கா் காணியும் வழங்கப்பட உள்ளது. .  இதன் ஊடாக மொனராகல, ஊவா போன்ற பிரேதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படும்.

இலங்கையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் உள்ளனா். அவா்களுக்கு 30 வருடங்களுக்கு மேல் ஓய்வூதியம் சம்பளம் வழங்கப்படுகின்றது. இதற்காக பாரிய நிதியை, இலங்கை வரி அறிவீட்டுப் பணத்தினை செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் ஒரு பொதுநிருவாக சேவையில் நிர்வாக உயா் பதவி வகிக்கும் ஒரு செயலாளர்  ஆகக் கூடிய சம்பளமாக 75 ஆயிரம் ரூபாவை மட்டுமே பெறுகின்றாா். ஆனால் ஒரு தனியாா் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்  02 லட்சம் முதல் 25 லட்சம் ரூபா வரையிலான சம்பளத்தினைப்  பெறுகின்றனா். இதனால் அரச நிருவாக அதிகாரிகள் இலங்கையில் குறைந்த சம்பளத்தினையே பெறுகின்றனா். இருந்தபோதும், அவா்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் 30 தொடக்கம் 35 வருடங்கள் ஓய்வுதியம் வழங்க வேண்டியுள்ளது.

இலங்கையில் விவசாய உற்பத்தி 35 வீதமாகும். ஆயினும் அதில் 7.8 வீதமே வருமானம் கிடைக்கின்றது. ஆனால் புதிய நவீன முறைக்கு தமது உற்பத்திகளை மாற்றுவோமேயானால் நாம் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.  விவசாயத்துக்காக இலவசமாக தண்னீா் வசதிகள், மானிய விலையில் பசளை வழங்கிய போதிலும் நமக்கு 06 வீதமே அதில் வருமானம் உள்ளது. இந்த நாட்டில் வாழும் ஒருத்தரின் தலா வருமானம் 02 அமெரிக்க டொலராகும்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்கள் எமது நாட்டுக்கு வழங்கும்  சில சலுகைகளுக்காக, பல விதிகளை முன்வைக்கின்றனா் . ஆனால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சர்வதேச நாணய நிதியம் என்ற அமைப்பே கிடையாது. அவா்கள் தமது சொந்த நாட்டின் மொத்த வருமானத்தில் தமது தேவைகளை  நிறைவேற்றுகின்றனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்