வீதி விபத்தில் கரடி பலி
– பாறுக் ஷிஹான் –
மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடியொன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.
மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘டிப்பர்’ ரக வாகனத்தில் மோதியே -கரடி பலியா கியது.
உயிரிழந்த கரடியை – மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டு, மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, விசாரணைகளின் பின்னர், மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் குறித்த கரடியின் உடலை கொண்டு சென்றதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.
மடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையில் அப்பகுதியில் கரடி போன்ற காட்டு மிருகங்களின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் நேற்றைய தினம், அரிய வகை சிறுத்தை புலியொன்றும் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.