முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: மட்டு, அரச அதிபர்

🕔 October 16, 2016

mrs-charles-0982– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ட்டத்திற்கு முரணாகவோ, நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் தான் மேற்கொள்ளவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு தரப்பினரும், தன் மீது சுமத்துகின்ற பாரிய குற்றச்சாட்டு குறித்து, பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு, தான் உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, திருமதி சார்ல்ஸ் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும், சிங்கள மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் ஊக்குவிக்கின்ற ஒருவராகவும் இனத்தின் துரோகியாகவும் என்னை இனம் காட்ட பலர் முயற்சிக்கின்றனர்.

அரசாங்க அதிபராக இந்த மாவட்டத்திலே இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றும்படிதான் அரசின் கொள்கைகளும், தீர்மானங்களும், சுற்று நிருபங்களும் எங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றன.

இதிலே உதாரணமாக இரண்டு விடயங்களை முக்கியமாக எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன்.

முதலாவதாக, வாகரை பிரதேசத்தில் மருதங்கேணிக்குளம் என்கின்ற பகுதியில் மீள்குடியேற்றுவதற்காக 22 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. 2014 ஆண்டு 04ம் மாதத்தில், அந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் விபரங்கள் மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக திரட்டப்பட்டு, அவர்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைக்கு எடுக்கும்படி, மீள்குடியேற்ற அமைச்சு எங்களுக்கு தெரிவித்திருந்தது.

தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுனராலும், ஏனைய நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களாலும், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவராலும் பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கலாக அனைத்தையும், பிரதேச செயலாளரது நடவடிக்கைகாக அனுப்பியிருந்தோம்.

பிரதேச செயலாளரின் தலைமையிலே நியமிக்கப்பட்ட ஒரு குழு, இந்த மக்களுடைய விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவர்கள் யுத்தம் இடம்பெற்ற காலத்துக்கு முன்னர், அப்பகுதயில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே, அவர்களின் மீள்குடியேற்றத்துக்கான சிபாரிசை வழங்கியது. அதன் அடிப்படையிலும் அவர்கள் ஏற்கனவே இருந்த காணிகள் வேறு மக்களுக்கு பிரதேச செலாளரினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காரணத்தினாலும், தற்போது அவர்களுக்கான மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதிலே உண்மையான ஒரு விடயத்தை இன்று சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

முன்னாள் அமைச்சர் தேவநாயகம் – இங்கு அமைச்சராக இருந்த காலத்தில், 1977ம் ஆண்டுக்கு முன்னர், இந்தப் பகுதியிலே 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டு அங்கு அவர்கள் வசித்திருந்தார்கள். அதற்கான ஆவணங்களும் பிரதேச செயலகத்திலே முன்னர் செயலாளர்களாக கடமையாற்றிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதே போல் இந்த மாவட்டத்தின் சில பகுதிகளில் யுத்த காலத்துக்கு முன்னர் வெளியேறிய சிங்கள மக்களும், தங்களுடைய இருப்புக்களை பிரதேச செயலாளரிடம் உறுதிப்படுத்திய பின்னர், அவர்களையும் மீள்குடியேற்றுமாறு, மீள்குடியேற்ற அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியது. அதன் பிரகாரம்தான், நாங்கள் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செய்கின்றோமே அல்லாமல், அரசாங்க அதிபராகிய நான் தன்னிச்சையாக எந்தவொரு இனத்துக்கும், மதத்திற்கும், மொழிக்கும் முன்னிறுமை கொடுத்தோ, சட்டத்துக்கு முரணாகவோ, நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

இதே போல் 2011ஆம் ஆண்டு கிரான் பிரதேச செயலகத்திலே. அந்தப் பிரதேச செயலாளர் 360 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி உத்தரவுப் பத்திரத்தை வழங்கியுள்ளார்.

இவற்றினையெல்லாம் செய்த அதிகாரிகள் யாராகவோ இருக்க,  இவை எதிலுமே ஈடுபடாமல் இருக்கின்ற என்னை – ஒரு துரோகியாக காட்ட ஊடகங்களும், புத்திஜீவிகளும், சில அதிகாரிகளும் , சமூகத்தை சேர்ந்தவர்களும் முற்படுகின்றனர்.

மீள்குடியேற்ற விடயத்தில் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், உண்மையாக அவற்றை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால், அவற்றை நேரடியாக என்னிடமோ அல்லது இந்த விடயத்தை கையாளுகின்ற மாவட்ட செயலகத்தின் எந்த அதிகாரயிடமோ தொடர்பு கொண்டு அதைப் பற்றிய விளக்கங்களை பெற்றுக்கொள்வதுதான் நாகரீகமான செயற்பாடுகள் என நாங்கள் நினைக்கின்றோம்.

அவற்றினை விடுத்து – ரகசியமாக கூட்டங்களை கூட்டி, அந்த கூட்டங்களிலே கேவலமான விதத்தில் விமர்சிக்கின்ற அநாகரீகமான நடைமுறைகளை கைவிட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்