பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு
பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கல்வி என்ற தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, ராஜாங்க அமைச்சர் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கடந்த கல்விப்பொதுத்தாரதர உயர்தரப்பரீட்சையில் 03 லட்சம் பேர் தோற்றினர். இதில் 01 லட்சத்து 50 ஆயிரம் பேர் சித்திப்பெற்றனர்.
எனினும் இலவசக்கல்வி முறையின்கீழ் இதில் 27 ஆயிரத்து 500 பேர் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெறவுள்ளனர்.
இது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 18வீதம் மாத்திரமே ஆகும்.
எனவே மீதமுள்ள 82 வீதமான இளைஞர்களின் நிலைக்குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் தொழில்சார்பு உயர்கல்வியை அறிமுகப்படுத்தும் முகமான சட்டமூலம் ஒன்றை முன்வைக்க, அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது” என்றார்.