இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: அமெரிக்க பாடகர் பொப் டிலன் பெறுகிறார்
இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பொப் டிலன் பெறுகிறார்.
யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை நோபல் குழு விடுத்துள்ளது.
புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாகத் திகழ்பவர். அவரின் ‘தெ டைம்ஸ் , தே ஆர் எ சேஞ்சிங்’ ( ( The times, they are a changing) , ‘ப்லோயிங் இன் தெ விண்ட்’ ( Blowing in the Wind), லைக் எ ரோலிங் ஸ்டோன் ( ( Like a Rolling Stone) போன்ற பாடல்கள் 1960களின் மிகப் பிரசித்தி பெற்ற பாடல்களாக ஒலித்தவை. அவை போருக்கெதிரான மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்துக்கு ஆதரவான முழக்கமாகவும் ஒலித்தன.
“அமெரிக்க பாடல் பாரம்பரியத்துக்குள் புதிய கவித்துவ வடிவங்களை உருவாக்கியமைக்காக, 75 வயதாகும் டிலனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது” என, நோபல் குழு கூறுகிறது.
ரொபட் ஆலன் ஸிம்மர்மான் என்ற இயற்பெயருடன் 1941ல் பிறந்த டிலன், காபிக் கடைகளில் பாடி – தனது இசை வாழ்வைத் தொடங்கினார்.
அவருடைய மிகப் பிரபலமான படைப்புகள் எல்லாம் 1960களில் இயற்றப்பட்டவை. அந்தப் படைப்புகள் அமெரிக்காவின் அந்த காலகட்டப் பிரச்சனைகளை சம்பிரதாய பூர்வமற்ற வகையில் கூறிய வரலாற்றாளராக அவரை மாற்றின.