கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை
– கத்தாரிலிருந்து முஸாதிக் முஜீப் –
கட்டார் நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்கள், அங்கிருந்து தண்டனைகளின்றி வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை, அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதியிருந்து டிசம்பர் 01ஆம் திகதி வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள், கட்டாரினை விட்டு வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, கட்டார் நாட்டில் தொழில் புரிவதற்காக வேறு நாடுகளிலிருந்து வந்து, பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Residency Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள், எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி, கட்டார் நாட்டில் இருந்து வெளியேறிச் செல்ல முடியுமென, கட்டார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொதுமன்னிப்புக் காலம், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது .
கட்டாரின் மொத்த சனத்தொகை 2004ஆம் ஆண்டு 07 லட்சத்தைத் தாண்டியிருந்த போது, இவ்வாறானதொரு பொதுமன்னிப்பினால் சுமார்06 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர்.
இவ்வருடம் ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பின் பிரகாரம் கட்டாரின் சனத்தொகை சுமார் 25 லட்டசத்து 60 ஆயிரமாகும்.
கட்டாரில் இவ்வாறு தங்கியிருக்கும் சட்ட விரோத குடியிருப்பாளார்கள், பொது மன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெறியேற, Search and Follow up Department திணைக்களத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.