மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

🕔 August 26, 2016

Article - Rifan - 011
– எஸ். றிபான் –

லங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பாடுகளைக் கொண்டுள்ளார்கள். கட்சியின் சொத்துக்கள், வருமானம் போன்றவை பற்றி பசீர் சேகுதாவூத் கேட்டுள்ள கேள்விகளுக்குரிய பதில் அளிக்கப்படாதுள்ளன.

பசீர் சேகுதாவூத்தின் கேள்விகள் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரைச் சார்ந்தவர்களையும், தாருஸ்ஸலாமின் பிரச்சினைகளுடன் தொடர்புடையவர்களையும் சிக்குமுக்காட வைத்துள்ளன. இந்தப் பின்னணியில் மிகுந்த எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கடந்த 23.08.2016 செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைமையகம் பற்றி முறையான விடைகளை வழங்கி பசீர் சேகுதாவூத்தை கதிகலங்கச் செய்வார்கள் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும், ஆதரவாளர்களில் பெரும்பகுதியினரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், விவாதங்களும், கூச்சல்களும், குழப்பங்களும் என படிப்படியாக சூடாகி, உருகி ஜனநாயக மறுப்புடன் உயர்பீடக் கூட்டம் முடிவடைந்துள்ளது. கட்சியின் உயர்பீடத்தில் ஜனநாயகம் இல்லை என்றால், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது முயற் கொம்பாகவே இருக்கும்.

23.08.2016இல் நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாம் பற்றி தமது நிலைப்பாட்டையும், பசீர் சேகுதாவூத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தான் விடைகளை அளித்ததாகவும் கூறினார். மேலும், தாருஸ்ஸலாம் யாருடைய தனிப்பட்ட பெயர்களிலும் இல்லை என்றும், அதன் வருமானங்களும், செலவுகளும் முறையாக கையாளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, “{கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் தனிப்பட்ட சொத்துக்களை அவரின் குடும்பத்திடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தாருஸ்ஸலாம் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. அது பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. நானும், சல்மானும் பொறுப்பாக உள்ளோம்” எனவும் கூறியதாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை, முன்னாள் தவிசாளரும், இளம் சட்டத்தரணியுமான அன்சில் அங்கு சில கேள்விகளை முன்வைத்தார். கட்சிக்குரிய காணியை தனிநபர் எழுதியுள்ளார் என்று சி.ஐ.டியில் செய்யப்பட்ட முறைப்பாடு, கட்சிக்கு வெற்றியை அதாவது காணியை மீட்டுக் கொடுப்பதற்கு சாதமாக அமைந்த போதும், கட்சியின் தலைவராகிய நீங்கள் காணியை பெற்றுக் கொள்ளாது சமாதானமாகிப் போனமை எதற்காக? நமது முறைப்பாட்டால் மாட்டிக் கொள்ளப் போகின்றவர்கள், எம்மிடம் வந்து காலைப் பிடித்து கட்சியின் சொத்தைத் தருகின்றோம், முறைப்பாட்டை வாபஸ் பெறுங்கள் என்ற நிலை ஏற்பட்டதன் பின்னரும் கூட, நீங்கள் கட்சிக்குரிய சொத்துக்களை பெற்றுக் கொள்ளாது முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டமையின் நோக்கம் என்னவென்று சொல்ல வேண்டும் என்று ரவூப் ஹக்கீமிடம் கேட்டதாகவும் தெரியவருகிறது.

“நாங்கள் கட்சியின் சொத்துக்களை மீட்பதற்கு வழக்கு போட்டோம் என்றார்” ரவூப் ஹக்கீம். “வழக்கு வைத்தீர்கள் என்பது கேள்வியல்ல. சி.ஐ.டியிடம் செய்த முறைப்பாட்டை ஏன் வாபஸ் பெற்றீர்கள் என்பதுதான் கேள்வியாகும்” என்று அடுத்த கேள்வியை கேட்டுள்ளார் அன்சில். “எங்களிடம் சிரேஸ்ட சட்டதரணிகள் இவ்வாறுதான் நடந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்கள்” என்றுள்ளார் ரவூப் ஹக்கீம். இதன்போது, “கட்சிக்கு நன்மை நடக்காது வாபஸ் வாங்கியது எதற்காக”? என்று அன்சில் கேட்டார். அப்போது குறிக்கிட்ட சட்டதரணி நிஸாம் காரியப்பர், “என்னுடைய கோட்டை கழற்றப் போவதாகக் கூறுகின்றார்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது. அதனை நான் பார்த்துக் கொள்வேன். ஏனக்கு பயமில்லை” எனத் தெரிவித்தாராம்.

“தலைவர் அஸ்ரப், கட்சியின் சொத்தை ‘லோட்டஸ்’ என்ற நம்பிக்கை நிதியத்திற்கு எழுதியிருந்தார். அப்படியிருக்க காணியை மட்டும் தனியார் கம்பனி ஒன்றுக்கு எப்படி எழுத முடியும். மறைந்த தலைவர் அதனை தனியார் கம்பனிக்குத்தான் எழுதச் சொன்னார் என்று சொல்லுகின்றீர்கள். மறைந்த தலைவர் அப்படித்தான் அன்று சொன்னார் என்பதனை நாங்கள் எப்படி நம்புவது”? என்று அன்சில் மற்றுமொரு கேட்டுள்ளார்.

அன்சிலின் தொடரான இக்கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கப்படவில்லை என்று உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் பசீர் சேகுதாவூத் எழுந்து தமது விளக்கத்தையும், சந்தேகங்களையும் முன் வைக்க முற்பட்டுள்ளார். “நான் யாரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பதற்காக கட்சியின் சொத்துக்களைப் பற்றி கேட்கவில்லை. ஏற்கனவே கட்சியின் சொத்துக்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்கள் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. இதன் பின்னர்தான் கட்சியின் சொத்துக்கள் பற்றிய தகவல்களை தேடிப் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் கட்சியின் சொத்தை மீட்டெடுப்பதில் – நாம் அலட்சியமாக இருந்து விட்டோமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இன்று கூட, நான் கேட்ட கேள்விகளுக்கு எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறுபசீர் சேகுதாவூத் சொன்னதுதான் தாமதம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் மிகவும் ஆக்ரோசமாக கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் போல பசீர் சேகுதாவூத்தை நோக்கி  “நீ கதைக்க முடியாது. ஊடகங்களில் கதைத்துவிட்டு இங்கு கதைக்க முடியாது” என்று சத்தமிட்டுள்ளார்.

இதற்கு பசீர் சேகுதாவூத், ”தம்பி நான் சொல்லுவதனை கேட்டுவிட்டு அதன் பின்னர் நீங்கள் கதைக்கலாம்” என்று தெரிவித்த போதும், அதனை தவம் ஏற்றுக் கொள்ளாது சத்தம் போட்டுள்ளார். இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாகீர், அட்டாளைச்சேனையை சேர்ந்த பழீல், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பிர்தௌஸ் ஆகியோரும், தங்களது கணக்கில் பசீர் சேகுதாவூத்தை பேச விடாது சத்தம் போட்டுள்ளார்கள் என்று தெரியவருகின்றது. இவர்களை தவிர, ஏனைய உறுப்பினர்களில் பலர்; “பசீர் சேகுதாவூத் என்ன சொல்லுகின்றார் என்று கேட்போம். இரண்டு பக்கத்து கதைகளையும் கேட்டால்தான் உண்மை தெரியும். அவரை பேசவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்ட போதிலும், மேற்சொன்னவர்கள் – சத்தம் போடுவதற்கே வந்தவர்கள் போலவும், திட்டமிடப்பட்டது போலவும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால், தாருஸ்ஸலாம் சந்தை போல் காட்சியளித்தாக, உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சத்தங்களுக்கு மத்தியில் பசீர் சேகுதாவூத் மிகுந்த கோபத்துடன் தமது கருத்துக்களை முன் வைத்துள்ளார். அவற்றை கேட்கும் நிலை அங்கு பலருக்கு இருக்கவில்லையாம். இவ்விடத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு விடுமோ என்று பயந்தவர்களாக சிலர் அமைதியை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அது அவர்களுக்குவெற்றியைக் கொடுக்கவில்லை. இதனிடையே ரவூப் ஹக்கீம் அமைதியை ஏற்படுத்தி, பசீர் சேகுதாவூத்தை பேச வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குழப்பமும், சத்தங்களும் அவருக்கு நன்மைகளை கொடுப்பதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அமைதியை பேணுமாறு கட்டளை பிறப்பிக்கவில்லை போலும்.

இந்த கூச்சல்கள், சத்தங்கள், அநாகரியங்களுக்கு மத்தியில் மன்னாரைச் சேர்ந்த சமீம் என்பவர்; “மஹிந்தவிடம் கட்சியை அடகு வைத்தவர்தானே நீங்கள்” என்று பசீர் சேகுதாவூத்திடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட பசீர் சேகுதாவூத் மிகவும் முக்கியமான சில தகவல்களைச் சொல்லியுள்ளார். அதாவது, “நான் மஹிந்தவிடம் ஏன் போனேன் என்று தலைவரிடம் கேளுங்கள். யார் சொல்லிப் போனேன் என்று இவரிடம் (ரவூப் ஹக்கீமை விரல் நீட்டிக்காட்டி)கேளுங்கள். எல்லாம் இவருக்கு தெரியும். இவரைக் கேளுங்கள். யாருடைய மானத்தை காப்பாற்ற போனேன் என்று இவரிடம் கேளுங்கள். எந்தக் கட்சியையும், தலைவரையும் காப்பாற்றுவதற்கு போனேன் என்று இவரிடம் கேளுங்கள்”. இவ்வாறு ரவூப் ஹக்கீமை நோக்கி விரலை நீட்டி சொல்லிக் கொண்டிருந்துள்ளார். அவ்வேளை ரவூப் ஹக்கீம் குனிந்து கொண்டிருந்தார்.

மேலும் பசீர் சேகுதாவூத் தெரிவிக்கையில், “இப்போது கூட, நான் ஏன் போனேன். ஏதற்காகப் போனேன் என்று சொன்னால் கூட கட்சி அழியும். அவை பற்றி இவரைச் சொல்லச் சொல்லுங்கள். அதன் பின்னர் பதிலைச் சொல்லுகிறேன். இவர் தலைவராக இருந்த 15 வருட வரலாற்றை நான் சொல்லுவேன். அந்தக் கதை உங்களுக்கு விளங்காது. ஆனால், இவருக்கு (ரவூப் ஹக்கீமுக்கு) விளங்கும். என்னை உயர்பீடத்தில் பேசாது தடுத்ததால் கவலையில்லை. நான் நீதிமன்றத்திற்கு செல்வேன். அங்கு கதைப்போம்.

இவ்வாறு குழப்பங்களும், சத்தங்களும், விவாதங்களும், அநாகரிமற்ற பேச்சுக்களின் மத்தியிலும்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. பசீர் சேகுதாவூத் பேசும் போது சத்தம் போட்டமை, அதனை கட்சியின் தலைமை பார்த்துக் கொண்டிருந்தமை – கட்சியில் ஜனநாயகக் கோட்பாடு சிதைக்கப்பட்டுள்ளமையை காட்டுகின்றது. சில வேளை, பசீர் சேகுதாவூத்தின் விளக்கத்தை உயர்பீட உறுப்பினர்கள் செவிமடுத்தால், தலைவருக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள் என்ற பயத்தினால் திட்டமிடப்பட்டு குழப்பியுள்ளார்கள் என்று எண்ணுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. பசீர் சேகுதாவூத்தின் கேள்விகளுக்கு முறையான பதில் இருக்குமாயின், பசீர் சேகுதாவூத் பேசும் போது சத்தம் போட்டு அநாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியதில்லை.

கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதவர்கள் சபையை குழப்புவார்கள். பேசப்படும் விடயங்களை செவிமடுக்காது இருப்பார்கள். இதனை சபை ஒழுங்கு என்று அழைக்க முடியாது. சிலருக்கு குழப்பம் செய்வது கைவந்த கலையாகும். இத்தகையவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உள்ளார்கள். ஆனால், இத்தகையவர்களை வைத்து காரியமாற்றுவது கத்தி முனையில் நடப்பதற்கு சமமாகும். சிலவேளை ஏவலாளியை கத்தி பதம் பார்த்துவிடும்.

இதே வேளை, சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி ரவூப் ஹக்கீம்; “அமைதியாக இருங்கள், பசீர் சேகுதாவூத் பேசட்டும்” என்று சொன்னதாக சில உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள். இது உண்மை என்று வைத்துக் கொண்டால், சத்தம் போட்டவர்கள் தலைவரின் ஆணைக்கு கட்டுப்படவில்லை என்று உண்மையாகும். அவர்கள் வேறு ஒருவரின் திட்டத்துக்கு அமைய நடந்திருக்க வேண்டும். இதன் மூலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் ரவூப் ஹக்கீமையும் மீறி, உயர்பீட உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்கள் கட்சிக்குள் உள்ளார்கள் என்று தெரிகின்றது. சிலவேளை இது ஒரு கூட்டு நாடகமாகவும் இருக்கலாம்.

இதே வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர்; “கூட்டத்தை நீட்டிக் கொண்டு போக இயலாது. கூட்டத்தை சுருக்கமாக  முடியுங்கள்” என்று சொன்னதாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். முரண்பாட்டாளர்களை சமாதனப்படுத்தி, கட்சியின் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு, உயர்பீடக் கூட்டத்தை பயன்படுத்த முயற்சிகளை எடுக்காது, பொறுப்பற்ற கருத்துக்களை முன் வைப்பது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நல்லதல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டங்கள், விடியவிடிய நடந்த கதைகளும் உள்ளன. அவ்வாறு இருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டிய அவசரத்தின் பின்னால் வேறு திட்டங்கள் இருக்கலாம்.

இதே வேளை, பசீர் சேகுதாவூத் உயர்பீடக் கூட்டத்தில் கதைக்க முடியாதென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் கருத்துக்களை முன் வைத்தமை, அவர் தனது கடந்த காலங்களை மறந்து விட்டார் என்பதாகவே இருக்கின்றது. அவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வோடு இருந்த காலங்களில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களையும், தலைவர் ரவூப் ஹக்கீமையும் அக்கரைப்பற்றிக்குள் நுழையவிடாது தடுத்து நிறுத்திக் காட்டியமையை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மறந்துவிடமாட்டார்கள். தனக்கு அக்கரைப்பபற்று மாநகர சபையின் மேயர் பதவி கிடைத்திருந்தால், இன்று வரைக்கும் அதாவுல்லாஹ்வோடு தவம் இருந்திப்பார். ரவூப் ஹக்கீமுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்திருப்பார். பசீர் சேகுதாவூத் தேசிய பட்டியலுக்காகத்தான் கேள்விகளை கேட்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியிருந்தால் மௌனமாகவே இருப்பார் என்று தவம் சொல்லுகின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டுமென்று வெளியிலிருந்து திட்டமிட்டவர்கள், தங்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதால், இன்று கட்சிக்குள் வந்து சூழ்ச்சிகளை செய்து கொண்டிருப்பதாக தெரிகின்றது என்று உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள். இவர்களினால் ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் தலைவரை புகழ்ந்து பேச வேண்டும். அவரின் நன்மதிப்பைப் பெற வேண்டுமென்று மூளைக்கும், நாவுக்கும் தொடர்பின்றி கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருப்பவர்களினால், ரவூப் ஹக்கீம் தொல்லைகளை எதிர்கொண்டு வருகின்றார்.  தாருஸ்ஸலாம் போன்று பத்து கட்டிடங்களை கட்டும் பணவசதியை மு.கா. தலைவர் ஹக்கீம் கொண்டுள்ளார் என்று அண்மையில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பேசியமை, தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பலர் தலைவரின் அன்பைப் பெற்றுக் கொள்வதற்காக, வாய்க்கு வந்தமாதிரி கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பசீர் சேகுதாவூத் பேசக் கூடாதென்று சத்தம் போட்டவர்கள், இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக வழங்கிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஒரு வருடம் கழிந்துள்ளமை பற்றி கேள்விகளை கேட்பதற்கு முற்படாது, மௌனமாக இருப்பதில் உள்ள நியாயம் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.

இன்று தலைவரை புகழ்ந்து பேசி, நியாயம், அநியாயங்களை கடந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற வேண்டும். சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வந்தால் தவிசாளர் பதவியை அடைந்து கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபையில் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பசீர் சேகுதாவூத்தை கட்சியிலிருந்து துரத்தி அல்லது தவிசாளர் பதவியை பறித்து அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று, வெறித்தனமாக பேசிக் கொள்கின்றவர்கள் உள்ள வரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை தூய்மைப்படுத்திக் கொள்ள முடியாது.

கட்சியின் கட்டமைப்பு சீரழிந்துள்ளது. அதனை மீளமைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காது, மாற்றுக் கட்சிகளிலிருந்து துரத்தப்பட்டவர்கள், கட்சியை உயிரிலும் மேலாக மதித்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களிடம் கேள்விகளை கேட்பதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் வளர்க்கப்பட்டுள்ள புதிய ஜனநாயகமாகும்.

குழப்பங்கள், முரண்பாடுகள், அநியாயங்கள், கழுத்தறுப்புக்களினால் சாதித்துக் கொள்ளும் சாதனைகள் வெகுவிரைவில் அவமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பதுதான் உலக நியதியாகும்.

நன்றி: விடிவெள்ளி (26.08.2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்