விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து
– க. கிஷாந்தன் –
திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் வண்டியை மோதிய கார் ஒன்று, பள்ளத்திலிருந்த வீட்டின் கெராஜில் விழுந்து, அங்கிருந்த வாகனங்களையும் சேதமாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை பொரலந்த ஹப்புதளை பிரதான வீதியில் ஹின்னாரங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.
வாகன விபத்தில் படுங்காயமடைந்த நபர், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹப்புதளை பகுதியிலிருந்து பொரலந்த நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்களில் சென்ற திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தரை மோதி விட்டு, பள்ளத்தில் இருந்த வீட்டின் கெராஜ் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது கெராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் கார் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளாகிய காரின் சாரதி, சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும், மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.