அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி
🕔 August 16, 2016
– பாறுக் ஷிஹான் –
சஊதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள தனவந்தர்களுடன், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் செய்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
யாழ் மஜ்ஜிதுல் மரியம் ஜும்மா பள்ளிவாசலில், பொது மக்களுடனான சந்திப்பினையடுத்து, தன்னுடன் வருகை தந்திருந்த அரபு நாட்டு தனவந்தர்கள் முன்னிலையில் இந்த வாக்குறுதியினை அமைச்சர் வழங்கினார்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகள், புதிய வீடமைப்புத் திட்டம் மற்றும் காணிகள் வழங்குதல் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மத்ரஸாக்கள் மற்றும் உடைந்த வீடுகளை அமைச்சருடன் இணைந்து அரபு நாட்டு தனவந்தர்கள் பார்வையிட்டனர்.
இவர்களுடன் அமைச்சரின் மீள்குடியேற்ற இணைப்பாளரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி, தகவல் வழிகாட்டல் நிலையப் பொறுப்பாளர் எம். நிபாஹீர், யாழ் – கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன தலைவர் ஜமால் முகைதீன், உப தலைவர் கே.எம் .நிலாம் மற்றும் சமூக சேவகர் எம்.ராஜு உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.