இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

🕔 August 14, 2016

Sumanthiran MP - 09‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

‘இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமான தீர்வு வேண்டும்’ என்பதே இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானமாக உள்ளதாகவும், அவர் விபரித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் கூறுகையில்;

விசேடமாக இன்றைய அரசியல் சூழ்நிலை, அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கம் மற்றும் எமது பிரதேசங்களில் இயல்பு வாழ்வுக்கு எமது மக்கள் திரும்ப முடியாதுள்ளமைக்கான பல அழுத்தமான விடயங்கள் போன்றவற்றை இன்று நாம் பேசி ஆராய்ந்திருக்கின்றோம்.

இதன் இறுதியில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவையாவன, போர்க்குற்ற விசாரணைகள் – சர்வதேச விசாரணையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தமிழரசுக்கட்சி கருதுவதாகவும் அப்படியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் விசமத்தனமாகவும் பொய்யாகவும் ஒரு பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. எனினும் அப்படியாக கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை.

கட்சியினுடைய நிலைப்பாடாக முழுமையான சர்வதேச ஈடுபாடோடுதான் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பது – தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து கட்சியோ, கட்சியின் உறுப்பினர்களோ மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினாலே இலங்கையினுடைய முன்மொழிவோடு சேர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கட்சிக்கோ கட்சி உறுப்பினர்களுக்கோ கிடையாது என்பதற்கு நாம் ஏகமனதாக இணங்கியிருக்கின்றோம்.

அடுத்து, அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பதுதான் நாம் எடுத்துள்ள நிலைப்பாடு என்று ஒரு பொய்யானதும் விசமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அப்படியான நிலைப்பாட்டை கட்சியோ, கட்சி தலைமையோ, கட்சியின் உறுப்பினர்கள் எவரேனும் எந்த காலத்திலும் எடுத்திருக்கவில்லை. சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே, தொடர்ச்சியாக நாம் இன்றும் கொண்டுள்ள நிலைப்பாடு. அது தொடர்ந்தும் இருக்கும். இதை விடுத்து எந்த மாற்றுக்கருத்தும் எந்தக்காலத்திலும் எடுக்கப்படவில்லை என்பதையும் நாங்கள் ஒரு தீர்மானமாக எடுத்துள்ளோம்.

மற்றும் இதுவரை காலமும் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் மக்களின் இயல்பு வாழ்வு சம்பந்தமாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆமோதிப்பதாகவும், ஆதரிப்பதாகவும் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.

இவை தவிரவும், மேலும் இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். அதாவது முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை நாங்கள் மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் உண்மை இருக்குமாக இருந்தால் – அது, பாரதூரமான விடயமாகும்.

எனவே, இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது. அதற்கான அடிப்படை தரவுகளை அறிகின்ற விடயங்களையும், சில முன்னேற்பாடான விடயங்களையும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் தலைமையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எடுத்துள்ளது. அதனை கிழக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடாக எடுக்கும் படியாக நாம் கேட்டுள்ளோம். இதன் உண்மை சரியான விதத்தில் அறியப்பட வேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான விடயம் இடம்பெற்றிருந்தால் இது பாரதூரமானதாகும்.

அத்துடன் இவ்வாறான செய்தி வந்துள்ளமையினால், முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகவும் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்ளனர். எனவே, இது மிக அவதானமாகவும் பொறுப்போடும் நேர்த்தியாகவும் கையாளப்பட வேண்டிய விடயம். வெறுமனே பேசவேண்டும் எனபதற்காகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டும் என்பதற்காகவும் பொறுப்பில்லாமல் பேசி ஏற்கனவே நொந்துபோயுள்ள முன்னாள் போராளிகளையும், அவர்களது குடும்பங்களையும் மேலும் மன உளைச்சலுக்குள்ளாக்கக் கூடாது. அவர்களுக்கு வேண்டிய எல்லா ஆதரவுகளையும் கொடுக்கவேண்டும் எனற தீர்மானத்தையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்