மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை
🕔 June 20, 2015
– பாறுக் ஷிஹான் –
சிறுபான்மையினரை ஒடுக்கிய மஹிந்தவின் பேரினவாதம் மீண்டும் தலைதூக்குவதை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு தடுக்க வேண்டுமென நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
‘மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, சில நாட்களுக்கு முன்னர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ – மீளவும் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு விருப்பமில்லை. அவரின் மீள் வருகை இடம்பெற்றால், அதற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வோம். பிரதம வேட்பாளராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது தேசியப் பட்டியல் மூலமோ மஹிந்த அரசியலுக்கு வரமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது மகிழ்சியளிக்கின்றது.
பேரினவாதச் செயற்பாட்டாளர்கள் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது. தற்போது காலாவதியான நாடாளுமன்றம் உள்ளது. அந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் வைத்து புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.
அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட்டு, சிறுபான்மையினரை ஒடுக்கிய மஹிந்தவின் பேரினவாதம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க வேண்டும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். அது முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது.
ராணுவத்தினர் வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டுமென அழுத்தங்கள் கொடுப்போம். ராணுவத்தினரைக் குறைக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்க மாட்டோம். இருந்தும் தமிழர் பிரதேசங்களில் ஏன் அதிகளவான ராணுவத்தினர் இருக்கின்றனர் என கேள்விகளை எழுப்புவோம்.
ராணுவத்தினரின் தேவைக்காக – காணிகளை எடுப்பது என்றால், வடமாகாண சபையுடன் பேசி, முடிவுகளை எட்டிய பின்னர் எடுக்க வேண்டும். அதை விடுத்து, பலவந்தமாக காணிகள் எடுப்பதற்கு எதிராக குரல் கொடுப்போம். காணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் விவசாய காணிகளை தொடர்ந்தும் ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.
சிறைகளில் 312 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைக்காக சிறைகளுக்குச் செல்லவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு முனைப்புடன் செயற்படவேண்டும். காணாமற்போனோர் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறவேண்டும். அவர்கள் எங்கிருக்கின்றார்கள், அவர்களின் நிலைமைகள் என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.