குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை

🕔 August 10, 2016

Gnanasara Thero - 087– எப். முபாரக் –

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை மாலை அந்தக் கிராமத்துக்கு அருகில் உரையாற்றவுள்ளார்.

இதன் காரணமாக, அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடி நிலைமை உள்ளதால், ஞானசார தேரரின் உரையினை தடுத்து நிறுத்துமாறு அப்பிரதேச முஸ்லிம்கள் வலியுறுத்திய போதிலும், ஞானசார தேரர் சமய சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார் எனக்கூறி, அந்நிகழ்வை நிறுத்துவதற்கு பொலிஸார் நிராகரித்துவிட்டனர்.

ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு, மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதிலும், ஞானசார தேரரின் நிகழ்வு ரத்துச் செய்யப்படவில்லை.

ஞானசார தேரரின் நிகழ்வு தொடர்பான சுவரொட்டிகள், முஸ்லிம் கிராமத்தை ஊடறுத்து ஒட்டப்பட்டுள்ளதோடு, கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் இந்த விடயம் தொடர்பாக சமரசப் பேச்சுக்கள் நடைபெற்றன. இதன்போது, நடைபெற்றவுள்ளது சமய சொற்பொழிவு எனக் காரணம் காட்டி, அதை தடைசெய்ய முடியாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை முதல், கிரிஉல்ல பொலிஸ் நிலையத்திலிருந்து, மூன்று பொலிஸார் மாத்திரமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில், இவ்வாறான நிகழ்வுகளின் போது ஏற்பட்ட கலவரங்களில், பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

ஆகையினால், விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பை வழங்குமாறு கோரியிருந்த போதிலும், இதுவரை அவர்கள் கடமையில் அமர்த்தப்படவில்லை.

இதனால் அவசரமாக மும்மன்ன கிராமத்துக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்