சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்
சரியான முறையில் முன்னாள் தலைவர்கள் அரசாட்சி செய்திருந்தால், கால்கள் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“அதிகார மோகம் படைத்த ஒருசிலர், தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்றபோதும், அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமையுடனும் நடவடிக்கை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுகின்றது.
ஒன்பது இலட்சம் கோடி ரூபா கடன் சுமையினால் இன்று எமது நாடு அவதிப்படுகின்றது. கடந்த அரசாங்கம் பாரிய அபிவிருத்திபற்றி மார் தட்டிக்கொண்டு, தாங்க முடியாத கடன் சுமைக்கு நாட்டை இட்டுச்சென்றபோதும், இக்கடன் சுமையினை புதிய அரசாங்கம்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து, மீண்டுமொரு ஆட்சியைக் கோரி இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்வதற்கான தேவை எனக்கு ஏற்படாது. எனது பதவிக்காலத்தில் என்னுடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுகிறேன்” என்றார்.
இந் நிகழ்வில், அமைச்சர்களான கபீர் ஹசீம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ரஊப் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் சம்பிக்கா பிரேமதாச, மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.