வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு
– அபூ மனீஹா –
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு – வெற்றியீட்டிய மாணவர்களை, பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை – பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம். சரிப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றிகளைப் பெற்றுத் தந்த மாணவர்களோடு, அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 ஆவது மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிகள், கடந்த 13ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை, கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டிகளில் – ஒலுவில் அல் ஹம்றா மகாவித்தியாலயம், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டது.
நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டியில், 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் ஆர்.எம். றிப்தி தங்கப் பதக்கத்தினைப் பெற்று முதலாமிடத்தையும், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பி.எம். நௌசாத் இரண்டாமிடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும், வெற்றி கொண்டனர்.
இப் பாடசாலை வரலாற்றில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களான எம்.ஆர். றபி அமான், ஐ.எல். சாதிக் அகியோரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, பாடசாலை பிரதி அதிபர்களான எம்.எல்.எம். இஸ்மாயில், ஏ.எல்.எம். யாசின், வலயத்தலைவர் அஷ்ஷெய்க் யு.கே. அப்துர் றஹிம் ,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமுகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.