விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபையுடன் இணைந்து – இந்த திட்டத்தை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், விபத்துக்களின் போது, முச்சக்கரவண்டி சாரதிகளை விட பயணிகளே அதிகளவில் உயிரிழப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர்தெரிவித்தார்.
தற்போதைய திட்டத்தின்படி – மேல் மாகாண சபையில் பதிவு செய்யப்படும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள், விபத்துக்களின் போது உயிரிழந்தால் ஐந்து இலட்சம் ரூபா இழப்பீடும், முச்சக்கரவண்டியில் பயணிக்கும் மூன்று பயணிகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபா இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி மேல் மாகாணத்திலுள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் – தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.