ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்
ராஜபக்ஷவினரின் புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகள் பதுளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சிக்க – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே தலைமை வகிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான விரிவான தேசிய சக்தியொன்றை பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதியிலிருந்த 04 ஆம் திகதி வரை, இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பதுளை மாவட்டத்தின் 09 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய 18 உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் இந்த திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான விரிவான சக்தியொன்றை அமைக்கும் திட்டத்தில் புத்திஜீவிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசியல் சக்தி தொடர்பிலான சின்னம், நிறம் போன்றன ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த விடயங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.