பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம்
🕔 June 24, 2016
– க. கிஷாந்தன் –
டிக்கோயா தரவளை தோட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் – கோயில், கட்டிடங்கள் உட்பட வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் கடுமையான காற்று வீசியதிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த அனர்த்தம் காரணமாக – இங்குள்ள ரோதமுனி ஆலயம், தனியார் நிறுவனத்தின் இரண்டு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டர் சைக்கிள் இரண்டும் சேதமாகியுள்ளன.
இவற்றில் ஆலயமும் கட்டிடமொன்றும் முற்றாகவும், மேலும் ஒரு கட்டிடமும் இரண்டு வீடுகள் மற்றும் வாகனங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக அதிக வலு கொண்ட மின்சார கம்பங்களும் உடைந்து விழுந்துள்ளன. இதனால் இப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, திருத்தப் பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பழைமை வாய்ந்த மரமொன்று வீழ்ந்தமையினாலேயே இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.