இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

🕔 June 1, 2016
M.S. Subair - 971– றியாஸ் ஆதம் –

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப் போவதாக மீள் குடியேற்ற அமைச்சினால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பேரூந்து வீட்டுத்திட்டமானது, எமது சூழலுக்குப் பொருத்தமற்றவை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் சீமெந்து பொதிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வியத்தினைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சிபாரிசுக்கு அமைய, எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சீமெந்து பொதிகளை,வறிய மக்களுக்கு கையளிப்பதில் மிகவும் சந்தோசமடைகின்றேன். அதற்காக அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கென, அரசாங்கத்தினால் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளது. இவ்வீடுகள் இரும்பு பேரூந்து வடிவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான வீடுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பொருத்தமற்றவையாகும். வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்ற இக்காலகட்டத்தில், இவ்வாறான வீட்டில் மக்கள் குடியிருப்பது என்பது மிகவும் கஷ்டமாகும். ரசாயணக் கலவைகளாலும் பேரூந்து பாகங்களாலும் குறைந்த உயரத்தில் அமையும் இவ்வீடுகள், மேலும் வெப்பத்தை அதிகரிக்கவே செய்யும். எனவே இவ்வாறான வீடுகள் எமது சூழலுக்கு பொருத்தமற்றவையாகும்.

இவ்வீடுகளில் விறகுகளைக்கொண்டு தங்களுக்குத் தேவையான உணவுகளை சமைக்க முடியாது. மேலும், நீண்டகாலமாக இவ்வீடுகளில் வசித்தால், நோய்த் தாக்கங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடும் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

இவ்வீட்டுத்திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொருத்தமற்றவை என புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என பலரும் கூறுகின்றனர். இவ்வீட்டுத்திட்டமானது வட பகுதிக்கு பொருத்தமற்றது என வடமாகாண முதலமைச்சரும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இவ்வீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பொருத்தமற்றவை என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அதேபோன்று, மொரட்டுவைப் பல்கலைக்கழகமும் தெரிவித்துள்ளது.

ஒரு இரும்பு பேரூந்து வீட்டுக்கான மொத்தச் செலவு 21 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையினைக் கொண்டு, இதே அளவுடைய வீட்டை கல், மண் மற்றும் சீமெந்து கொண்டு அமைக்கும்போது, இரண்டு வீடுகளை அமைக்க முடியும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு, கிழக்கில் 01 லட்சத்து 37 ஆயிரம் வீடுகள் தேவையாகவுள்ளன. அவ்வாறாயின் 65 ஆயிரம் பேரூந்து வீடுகளுக்குரிய செலவினைக் கொண்டு, எமது மக்களுக்கு பொருத்தமான வகையில் 01 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளை அமைத்து வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குரிய வீட்டுத்தேவையை நிறைவு செய்ய முடியும்.

எமது நாட்டிலே அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் எமது மக்கள் தனிப்பட்ட ரீதியாக கட்டிக்கொள்ளுகின்ற வீடுகள் கல், மண் மற்றும் சீமெந்து கொண்டே கட்டப்படுகின்றன. இவ்வீடுகள் மிகவும் உறுதியானதானவையாகும். இப்பேரூந்து வீட்டின் ஆயுட்காலம் 35 வருடங்கள் என கூறப்படுகின்றது. இவ்வீட்டின் மாதிரி வீடொன்றும் யாழ்பானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்வையிட்ட மக்கள் இவ்வீடானது 05 வருடங்கள் ஆயுட்காலத்தைக் கொண்டதென தெரிவிக்கின்றனர்.

ஆகவே, 65ஆயிரம் வீட்டுத்திட்டம் மக்களுக்காக கொண்டு வரப்படும்போது, எமது பிரதேசங்களில் கிடைக்கின்ற வளங்களைக் கொண்டு அவற்றினை அமைக்க வேண்டும். மேலும், அம்மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்றவாறும் அச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாத வகையிலும் அந்த வீடுகள் அமைக்கப்பட வேண்டும்”

இவ்வீடமைப்பு திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையிலும் மாகாண சபை உறுப்பினர் சுபையிர் தனிநபர் பிரேரணையொன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

M.S. Subair - 972

Comments

புதிது பேஸ்புக் பக்கம்