செனட்டர் மசூர் மௌலானா காலமானார்
– முன்ஸிப் –
முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.
அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மரணிக்கும் போது 83 வயதாகும்.
மசூர் மௌலான ஆங்கில ஆசியராகவும் கடமையாற்றியிருந்தார்.
தேசிய அரசியலுக்குள் மருதமுனை உள்ளீர்க்கப்பட்ட வரலாறு மசூர் மௌலானாவுடன் தொடங்குவதாக, மருதமுனையின் வரலாற்றினைப் பதிவு செய்யும் ‘மாண்புறும் மருதமுனை’ நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து, தந்தை செல்வாவுடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மசூர் மௌலானா, 1956 ஆம் ஆண்டு, தமிழுக்கு சம உரிமை கோரி காலிமுகத் திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் தமிழ் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொண்டமை வரலாற்றுப் பதிவாகும்.